குறிக்கோள்

இறையைப் பற்றி, ஆன்மிகத்தைப் பற்றி சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நமக்கு முன்னே புகழொடு தோன்றி வாழ்ந்து, இறையொடு ஒன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், ஏனைய அருளாளர்களும் உணர்ந்து, கசிந்து பாடிப் பரவிச் சென்று விட்டார்கள். இனிப் புதிதாகச் சாற்ற வேண்டியது ஏதேனும் உண்டோ? தமிழரின் வாழ்வும் வாக்கும், பக்தியும் ஆன்மீகமுமாய் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த பெருநெறியாய் விளங்கி வந்திருப்பது கண்கூடு. நாத்தீகம் பேசி நாத்தழும்பேறியவராலும் மறுக்க முடியாத உண்மை. இறையைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு நாமும் பேசுவோம்..... எதைப் பற்றி? நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், அருணகிரியாரும், பட்டினத்துப் பிள்ளையும், தாயுமானவரும், இராமலிங்க வள்ளலாரும், ஏனைய மத அருளாளர்களும், மெய் நெறியாளர்களும் உணர்ந்து, துய்த்து, பாடிப் பரவிய பரம் பொருளை, இறையை, இறையருளை ஏத்திப் போற்றிப் பாடிய பாடல்களை செந்நெறியாளர்களின் வாயிலாகக் கேட்போம், தெரிந்து தெளிவோம், சிந்திப்போம், சிந்தித்துப் பேசுவோம்.

Wednesday, July 21, 2010

திருஞானசம்பந்தரின் இசைஞானத் தமிழ்

உயரிய கருத்துக்களை, உலகியலாயினும், ஆன்மிகமாயினும், இசை வழியே செவிக்குணவாக்குவதே மக்களின் சிந்தை நலம் சிறக்க, செழிக்க, தகுந்த வழி, சரியான வழி என்று அருளாளர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் தெரிவுசெய்தனர். சுருங்கச் சொல்லுதலும், பாடல்களால் மட்டுமே முடியும். உரைநடையில் பல பக்கங்களில் எழுதக்கூடிய செய்தியை இரண்டு வரிகளில், ஏழு சீர்களில் சொல்லி முடித்தார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். படனம் செய்வதற்கும், மனனம் செய்வதற்கும் உகந்தது இசைப் பனுவல்களே என்பது யாவரும் அறிந்த உண்மை.

இந்தப் பின்னணியில், பன்னிரு திருமுறைகளில், முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் அருளிச்செய்யப்பட்டவை. வகுக்கப்பட்ட வகைகள் இரண்டு-ஒன்று பதிகங்களின் பண்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் முறை “பண் முறை” .மற்றொன்று அந்தப் பதிகங்கள் எந்தத் தலங்களில் பாடப்பட்டன என்பதைத் தெரிந்து அமைக்கப்பட்ட “தலமுறை”. நம்பியாண்டார் நம்பி பண்முறையை அடிப்படையாகக் கொண்டு திருமுறைகளைத் தொகுத்துள்ளார். முதல் திருமுறையில் ஏழு பண்கள். இரண்டாம் திருமுறையில் 6 பண்கள், மூன்றாம் திருமுறையில் 9 பண்கள் என்ற வகையில் 22 பண்களைக் கொண்டது இசை ஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைகள்.

திரு.வீரபத்திர முதலியார் என்னும் ஆராய்ச்சியாளர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தாந்த தீபிகை என்ற ஆய்விதழில் தி.ஞா.சம்பந்தர் தமிழ் பக்தி, இசை இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள அரும்பெருந் தொண்டையும், அவரின் சாதனைகளையும் பற்றி “Lord Sambanda and an unknown Tamilian Prosody” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி::

“யாண்டும் திகழும் இறையருளைப் போற்றிப் புகழ்ந்து அடங்காத தாகத்துடன், மடை திறந்தாற் போல் பற்பல யாப்பு முறைகளில் ஏறத்தாழ நூறு வகையான புதுப்புது யாப்பு வகைகளை இவ்வளவு நேர்த்தியாக பாடிச் சென்றுள்ள புலவர்கள், வடமொழி உட்பட வேறு எங்கேயும் இருந்திருக்கிறார்களா? தெரியவில்லை. இவற்றில் காலவெள்ளத்தில் மூழ்கிப் போனவைகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இன்று கிடைக்கப்பெற்றவை அந்தப் பெருவெள்ளம் விட்டுச் சென்ற குளங்களின் தேக்கங்களாகவே தோன்றுகின்றன.”

நம்பியாண்டாரரும், சேக்கிழாரும் சம்பந்தர் படைத்த புதிய யாப்புகளை-திருவிருக்குக்குறள், பல்பத்து, பாசுரம், யாழ்முரி, சக்கரமாற்று, மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, அராகம், சக்கரம் ஆகிவற்றை மூல இலக்கியம் என்று முறைப் படுத்தினார்கள்.

பண்மதியால் சொன்ன பாடல்(3.360.11); கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கலால், ஓதி வந்த வாய்மையால் உணர்த்துரைக்கலாகுமே(3.310.7); கானத்தின் எழு பிறப்பு என்று சேக்கிழார் சம்பந்தரை மெய் சிலிர்த்து அழைக்கிறார்; நம்பி ஆரூரர் அவரை நல்லிசை ஞான சம்பந்தன்(7.67.5) என்று போற்றுவார். “சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன்”(2.170.11); “தமிழ்க் கிளவி இன்னிசை செய் ஞானசம்பந்தன்” என்பவை சம்பந்தரே கூறிக்கொள்பவை.
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து பண்ணொடு ஆநந்தமாய் இசையுடன், பாட முடியவில்லையே என்று யாரும் அயர்ச்சியுற வேண்டாம்.
இசைப்பயிற்சி இல்லாதவர்கள், பண்ணிசை அறியாதவர்கள் மனம் தளரவேண்டாம். மறைஞான சம்பந்தர் மாற்றுக்கூறித் தேற்றுவிக்கின்றார்:
தாழிளங் காவிரி வடகரையடைகுரங்காடுதுறைப்
போழிளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்பந்தன் கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடுவானுலகின் ஊடே(3/6/739-திருவைகாவூர்/987)
(..கோழை பொருந்திய கண்டத்தை உடையவராகி, இசைத்துப்பாடும் பான்மை இலராயினும் உரிய பண்ணிசையின்றி ஓதி உரைத்தாலும் அவர்கள் வானுலகில் உயர்வாக வைக்கப்படுவார்கள். தமக்குக் கூடுகின்ற இசையால், அன்பின் மிகுந்த அடியவர் எவ்வகையில் சொன்னாலும், அவற்றை ஏற்றுமகிழ்பவர் சிவபெருமான். திருப்பதிகங்களைப் பண் இசையுடன் ஓதுதல் முறையாதலாயினும் அத்தகைய மரபினை விடுத்து இப்பதிகத்தை ஓதினாலும் நன்மை பயக்கும்)

226 திருத்தலங்கள் மேவி, 22 பண்கள் 4168 பாடல்களை உள்ளடக்கிய 384 பதிகங்கள் தோறும் மனிதரை ஆற்றுவித்து, தேற்றுவித்து, ஊக்குவித்து, ஓங்குவிக்கும் திருஞானசம்பந்தரின் ஆற்றல் வாய்ந்த திருக்கடைக்காப்பு வரிகள் “எனது உரை தனது உரையாக” ஆணையிட்டுச் சாற்றுவிக்கப்பட்டவையாகும். “நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் சொல் வார்த்தையன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று”, என இராமலிங்க சுவாமிகளும் பின்னர் இக்கருத்தை எதிரொலித்தார். மெய்ஞ்ஞானத்தை எண்ணியவர் எண்ணியாங்கு எய்திட ஞானசம்பந்தரின் பொய்யிலி மாலைகள் போன்ற இரட்சை வேறில்லை என்பதைக் கருத்தில் கொள்வோம்.

அங்கண்மதி கங்கைநதி வெங்கண் அரவங்கள் எழில் தங்கும் இதழித் துங்க மலர் தங்கு சடையர்(3.723) சூடிக்கொண்ட ஞானசம்பந்தராகிய பட்டை தீட்டப்பட்ட ஒப்பிலாமணியின் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுவித்து அவரை என்றென்றும் நம் நினைவில் நிறுத்தி, சிந்தனைசெய்து உய்வோம்.

No comments:

Post a Comment