நம்மெல்லோரையும் இன்று, இங்கு கூட்டுவித்த தென்னாடுடைய சிவனை, எந்நாட்டவர்க்கும் இறைவனை, பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடமிடுந் தில்லைக்கூத்தனைப் போற்றி, வணங்கி "அண்டப் பகுதிக்குச்” செல்வோம்.
திருநெறிய அன்பர்களுக்கு திருவாசகத்தின் பெருமையை நான் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். இருப்பினும், அறநெறிக்குத் திருக்குறள், அருள்நெறிக்குத் தலைநூல்களில் ஒன்றான திருவாசகம் - இவற்றின் தனித்தன்மையையும், சிறப்பையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்திப்பதும், செம்பொருள் உணர்ந்தோரின் வாயிலாகக் கேட்பதும் நமக்கு நன்மை சேர்க்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.
அறிவியலும், ஆன்மிகமும் கைகோர்த்து இறை புகழ் பாடும் அதிசயத்தை மாணிக்கவாசகர் படைத்த, சிறப்பாகத் திருஅண்டப்பகுதியிலும், பொதுவாக திருவாசகத்திலும் காண முடிகிறது. ’’இது என்ன?’’ - What is this? என்ற கேள்வியில் ஆரம்பித்து, பகுத்தும் வகுத்தும்(Analysis) ஆராய்வது ஆறிவியல். பகுப்பதும், வகுப்பதும் பொருளின் மூலத்தைத் தேடி, உண்மையை நாடுவதன் முயற்சியே. நான் யார்? - Who am I? என்ற கேள்வியில் ஆரம்பித்து, தொகுத்தும், பெருக்கியும்(Synthesis) ஆய்வது சமயம்(ஆன்மிகம்). தொகுப்பதும், பெருக்குவதும் பொருளின் மூலத்தைத் தேடி, உண்மையை நாடுவதன் முயற்சிதான். ஆக, அறிவியல், சமயம்(ஆன்மிகம்) இவை இரண்டின் குறிக்கோளும் மூலத்தை, உண்மையை அடைவதே. “சச்சிதானந்தம்” சத் + சித் + ஆனந்தம் - சத்தியமாகிய உண்மையை உணர்ந்தால், மெய்யறிவாகிய ஞானம் விளைந்து, வரம்பிலா இன்பமாகிய ஆனந்தத்தில் முடிவுறும்
அறிவியல் தேடலும், ஆராய்ச்சியும் உலகவாழ்க்கையை எளிதாக்கி வசதிகளையும் வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. (நிலம், நீர், வான் வழிப் பயணம், தொலை பேசி, தொலைக் காட்சி, கணினி, தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், அறுவைச் சிகிச்சை) Air, Sea & Space Travel, Automobile, Television, Telephone, Computer, Information Technology, Medicine & Surgery, etc இவைகளும் அறிவியலால் உண்மையை நாடித் தேடியதால் விளைந்த “சித்திகள்” தாம். ஆனால் இவை நிலையான, தேய்வும், தொய்வுமில்லாத பரமானந்தத்தைக் கொடுக்கமுடியாது, கொடுக்கவில்லை. வசதியான வசதியின்மையைக் (comfortably uncomfortable) கொடுத்திருக்கின்றன என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.
அணுவைத் துளைத்ததின் விளைவு, ஆக்கமும் அழிவும்; ஆக்கத்திற்குத் துணை-மின்னணு; மின்னணுவின் வீச்சும் தாக்கமும் உலகவாழ்க்கைக்கு இன்றியமையாததாகத் தோன்றுகின்றன. மின்னணுவைத் துளைத்ததின் விளைவு துன்னணு. துன்னணுவின் பயன் Nano Technology. துன்னணுவின் பகுப்பு நீக்கமற நிறைந்திருக்கும் பரமாணுவான Neutrino. Neutinoவின் பரிமாணம் விஞ்ஞானிகளைத் திகைப்பில் ஆழ்த்தி மெய்மறக்கச் செய்துள்ளது. ஆனால் பரமாணு இந்த இயல்புடையது, இந்த தன்மையுடையது என்று விளக்கமுடியாமல் தவித்து ஒரு பெயரை மட்டும் சூட்டி விட்டார்கள். உண்மையைத் தேடும் பயணம் முடியவில்லை. சச்சிதானந்த நிலையை எட்டவில்லை
ஆன்மிகத் தேடலும் தியானமும் அட்டமாசித்திகளை எய்துவிக்கும். இவைகளும் பரமானந்தத்தை அளிப்பதிலை. சித்திகளைக் கடந்து, புறக்கணித்து, ஒதுக்கித் தள்ளிவிட்டு பயணம் மேற்கொண்ட அருளாளர்கள்தான், சச்சிதானந்தத்தில் திளைத்து, கண்ட அதை விண்ட, திருமுறைகளின் நாயன்மார்களும், திவ்யபிரபந்தத்தின் ஆழ்வார்களும், பட்டினத்தார்களும், தாயுமானவர்களும், வள்ளலார்களும் ஆவார்கள்.
அறிவியல் - விஞ்ஞானம், சமயம்(ஆன்மிகம்) - மெய்ஞ்ஞானம் : பாதைகள் எதிர்மறையாகத் தோன்றினாலும், பயணத்தின் நோக்கும், இலக்கும் ஒன்றுதான் என்பதை விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் புரிந்துகொண்டால், உணர்ந்துகொண்டால் மோதல்களும், வீண்வாதங்களும் மறைந்துபோகும்.
திருவாசகத்திற்கு உரை எழுதுதல் கூடாது என்ற மரபு சைவ சமய உலகில் நிலவி வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். காரணம் - மணிவாசகர் எய்திய ஆன்மிக சிகரத்தை எத்தனை பேரால் எட்டியிருக்கமுடியும்? அந்த உயரத்திற்குச் சென்றவர்களால் மட்டுமே மணிவாசகரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உரை செய்யமுடியும் - என்பது ஒரு சாராரின் கருத்து. மொழிப் புலமை மட்டுமே உரைகாண உதவாது; அதற்கு மேலான ஆன்மிக அநுபவ முதிர்ச்சியும் இருந்தால் மட்டுமே திருவாசகத்தின் உட்கிடை இதுவாகும் என்று கூறமுடியும்.
“மகாவித்துவான் தியாகராஜச் செட்டியார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின், முதன்மை மாணவர். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்திற்கு உரை எழுதுமாறு வற்புறுத்தி வேண்டிய வண்ணம் இருந்தார். செட்டியார் ’ஆகட்டும்’ என்று தவணை சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு நாள் செட்டியார் காவிரியில் நீராடிவிட்டு நதியின் மேலுள்ள பாலத்தின் வழியே வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எதிரில் வந்த உரை கேட்கும் அன்பர், மீண்டும் ஒருமுறை நினைவூட்டி, திருவாசகத்திற்கு உரை எழுத வேண்டி வற்புறுத்தினார். செட்டியார், ’ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் அப்படியே நதியில் குதித்து விடுவேன்.’ என்றார் தியாகராஜ செட்டியார்.” இந்தத் தகவல், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஒரு புத்தகத்திற்காக எழுதிய அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். அந்த நூலின் பெயர் “திருவாசகமும், சிவராஜயோகமும்”; நூலின் ஆசிரியர், நமது மன்றப் பொருளாளர் Dr.இர.பாஸ்கரன் அவர்களின் தந்தையார் சிவயோகி மா.இரத்தினசபாபதி அவர்களாவார்.
ஆயினும், மணிவாசகரோ “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர் செல்வர் சிவனடிக்கீழ்....” என அறிவுறுத்துகிறார் அப்படியானால் பொருள் உணராதவர்கள் அவர் சொல்லிய பாட்டை சொல்லக்கூடாதா என்ற கேள்வி எழும். பொருளோ, அவரவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும், குருவருள், திருவருள் உணர்த்தும் நிலைமைக்கும் ஏற்ற அளவினது என்று கொள்வோம்.
“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்” மாணிக்கவாசகருக்குப்பின் 12 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய விஞ்ஞானி Nicolaus Copernicus கண்டது; “அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி”யாகிய அண்டவெளி தொலைநோக்கி வழியே கண்ட 16-ஆம் நூற்றாண்டின் Galileo Galilei-யின் பிரமிப்பு; “ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரும்” புவியீர்ப்பு சக்தி 17-ஆம் நூற்றாண்டில் Issac Newton, வியந்து போற்றியது; “துன்னணுப்புரையச் சிறியவாகப் பெரியோன் தெரிந்தது” 1930-ல் புரியாமல் புரிந்துகொண்ட Wolfgang Pauli; “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து...முன்சுரக்கும் இன்னருளே என்னப்பொழியும் மழை” அடுக்கிக்கொண்டே போகலாம்:
சிந்தனைக்கரிய சிவத்தை, ஒழிவற நிறைந்த ஒன்றை, உள்ளத்துணர்ச்சியில் கொள்ளவும் படாததை, நூலுணர்வுணரா நுண்ணியதை, சிறியதாகத் தோன்றும் பெரியதை, யாவையுமாய் அல்லையுமான சோதியை துன்னிருளை, வேறு வேறுருவும் வேறுவேறு இயற்கையும் நூறு நூறாயியிரம் இயல்புடையதை, ஒன்று-உண்டு-இல்லை என்று அறிவொளித்ததை, ஆணெனத் தோன்றி, அலினெப் பெயர்ந்து, வாள் நுதற் பெண்ணென ஒளித்ததை, (மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்ததை), இத்தந்திரத்தில் காணலாமென்றிருந்தோர்க்கு அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்ததை, நமக்கெல்லாம் உணர்த்தும் முயற்சி, அவரின் ஆழங்கால்பட்ட அறிவு, ஆன்மிக அனுபவம், திருவருள் நிறைவு ஆகியவற்றிற்குச் சான்றாகும். கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பண்பிற்கு, அன்பிற்கு, நேயத்திற்கு சிந்தனைச் செல்வர் சிவச்சந்திரன் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, திருஅண்டப்பகுதியில் சஞ்சரிக்க வகை செய்த பாங்கிற்கு நன்றி சொல்வோம்
No comments:
Post a Comment