
உ
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே
கண்ணும் கருத்தும் தமியேனுக்கு இன்றைக்கும் என்றைக்கும் நல்கு
விண்ணும் புகழ் கடவூர் வாழும் கள்ள வினாயகனே!
இறை பணியே, திருநெறி; திருநெறியே, இறைபணி. ஏகனுமாகி அநேகனுமாகிய ஏகாம்பரத்தை, தென்னாடுடைய சிவனை, எந்நாட்டவர்க்கும் இறைவனைப் போற்றி வணங்கி இடுகையைத் தொடர்வோம்.
அருணகிரிநாத சுவாமிகள், மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூரப் பெருமாளை, சுடர் வேலவனைப் போற்றி அருளிய திருப்புகழ் மாலையில் தொடுக்கப்பட்ட ஒரு சில மலர்களின் நறுமணத்தை சிறியேன் நுகர்ந்தவன் என்ற முறையில், அவர் “தீர்த்த மலை” மூர்த்தியைத் துதித்து பாடிய பாடலை சிந்திக்க முற்படுகின்றேன்.
பாடலுக்கு முன் ஒரு செய்தி : மூவர் முதலிகளான அப்பர், சம்பந்தர், சுந்தரரைப் போல், அருணகிரியாரும் தலயாத்திரை மேற்கொண்டு - வடக்கே இமயமுதல் (பா.எ.141, 142), தெற்கே இலங்கை (131 - 139) வரை, சந்தம் நிறைந்த பாடல்களால் கந்தப் பரம்பொருளை சிந்தித்து மகிழ்ந்திருக்கிறார். அருணகிரியாரைப் பொருத்தவரை, ஒரு தலத்தில் முருகப்பெருமானின் மூர்த்தம் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கின்றதா, இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. அவர், எங்கும், எதிலும் குமரகுருபரனையே காண்பவராதலால், பாடல் பார்வதி மைந்தனான கார்த்திகேயனைப் பற்றியே புனையப்பட்டிருக்கும். எடுத்துகாட்டாக பா.எ.144 - தலம் ஏழுமலையான் உறை திருப்பதி - “வேந்த குமார குகசேந்த மயூர வட வேங்கட மாமலையிலுறைவோனே / வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே.” வைணவ பக்தர்களுக்கு மாமாயன் வைகுந்தன் நாராயணன் “பெரும் ஆள்”- பெருமாள். தீயாடும் கூத்தனின் தில்லையம்பதி, சிதம்பரம் (பா.எ.189 - 200), “கயிலை மலைதனிலாடிய தந்தைக்குருக, மனமுனை நாடியெ கொஞ்சிக் கனகசபைதனில் மேவிய கந்தப்பெருமாளே.” அருணகிரியாரின் பெரும்பான்மையான திருப்புகழ் பாடல்களின் கடைசி வார்த்தை “பெருமாளே”. சிவஞான உபதேசிகன் சுப்ரமணியன் அவருக்குப் “பெருமாள்”.
தீர்த்தமலை மொரப்பூர் புகை வண்டி நிலையத்துக்கு 8 மைல் தொலைவில் உள்ள ஹரூருக்கு வடகிழக்கே 9 1/2 மைலில் உள்ள தலம். மலை அடிவாரத்திலும், மலையின் மேலும் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இப்பொழுது பாடலுக்குள் நுழைவோம்:
“பாட்டிலுருகிலை கேட்டுமுருகிலை
கூற்று வருவழி பார்த்துமுருகிலை
பாட்டை அனுதினம் ஏற்றுமறிகிலை தினமானம்
பாப்பணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியிலேற்ற மனது நல்வழிபோக
மாட்டமெனுகிறை கூட்டை விடுகிலை
ஏட்டின் விதிவழி ஓட்டமறிகிலை
பார்த்துமினியொரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்
வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்
ஏத்த புகழடியார்க்கும் எளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ
ஆட்டி (1) வடவரை வாட்டி அரவொடு
பூட்டி திரிபுரம் மூட்டி (2)மறலியின்
நாட்டம் அற சரண் நீட்டி (3)மதனுடல் திருநீறாய்
ஆக்கி (4)மகம் அதை வீட்டி ஒருவனை
ஆட்டின் முகம் அதை நாட்டி (5)மறைமகளார்க்கும்
வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா
சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற
ஓட்டி அழற் பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா
தீர்த்த எனதகம் ஏட்டை உடன் நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்தமலை நகர் காத்த சசிமகள் பெருமாளே.”
அருணகிரியார் தனது மனதை முன்னிலைப் படுத்தி, இந்தப் பாடலைத் தனக்காகவே பாடிக்கொண்டது போல் தோன்றினாலும், மற்றவர்களுக்காகப் பாடப்பட்டது என்பதே உண்மை.
பாட்டிலுருகிலை, கேட்டுமுருகிலை, பார்த்துமுருகிலை :- நாம் உருகவில்லையே என்று வருந்துகிறார். உருக முடியாமைக்குக் காரணம் என்ன? குழந்தையாயிருந்த போழ்து மனித மனம் இளகி நீரோட்டமாயிருந்தது. குழந்தை innocense – என்று உருவகப்படுத்துவது; களங்கமற்றது, குற்றமேதுமில்லாதது. கள்ளம், கபடம், சூது, வாது அறியாதது. உருகி அழுவது அதன் இயல்பு. அதே மனித மனம் காலப் போக்கில் இறுகிப் பனிப்பாறையாய் ஆகின்றது. நான், எனது எனும் தட்பம் மிகுந்ததால் நீர் குளிர்ந்து பாறையாகின்றது. பாறையாயிருந்தாலும் ஆசைக் கடலில் மிதக்கும். மிதக்கின்ற இந்த பாறையும் உருகும். எப்பொழுது?
• துன்பமாகிய வெப்பம் தகிக்கும் போது, இழப்பு ஏற்படும் போது - இழப்பு நெருங்கிய உறவாயிருக்கலாம், உயிராயிருக்கலாம், உடல் உபாதையாயிருக்கலாம், விலை மதிப்புள்ள பொருளாயிருக்கலாம், செல்வமாயிருக்கலாம். இறுகிய பாறைக் கண்ணீராய்க் கசியும்.
• மிகுதியான மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கப்படும். ஆனந்தமும் ஒருவகை வெப்பம்தான்.
• “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் / புன்கண் நீர் பூசல் தரும்” என்பார் வள்ளுவப் பெருந்தகை. அன்பு கண்ணீராய் பெருக்கெடுக்கும்.
• காலத்தினால் செய்த இடர் களைந்து துயர் துடைத்த உதவி, நன்றியறிதலாய் கண்ணீராய் வழிந்தோடும்.
மாணிக்கவாசகப் பெருமான் போற்றிய வண்ணம் “முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளை”, எல்லையற்ற பரங்கருணையை, இராமலிங்க சுவாமிகள் போல் நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து, நன்றி மறவாது ஊற்றெழுங் கண்ணீரதனால் உடல் நனைதலே உண்மையான உருகுதல். நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகத் / தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர் செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே என்கிறார் அருணகிரியார்.
• முருகப் பெருமானுடைய திரு அருள் புகழ் நிறைந்த பாடல்களைப் பாடி மனம் உருக வேண்டும்.
• பாடி நெகிழ இயலவில்லையாயினும், பிறர் பாடக்கேட்டாவது உள்ளம் உருக வேண்டும்.
• உடல் வேறு, உயிர் வேறாகக் கூறு படுத்துகின்றவன் கூற்றுவன். கூறு போடும் வேலை எப்போது வேண்டுமானாலும் நேரலாம். உயிர் உடலை இழக்கப் போகிறது; உடல் உயிரை இழக்கப் போகிறது. மனங்கரைந்து உருகலாம்.
“பத்தித் திருமுகம் ஆறுடன், பன்னிரு தோள்களுமாய்த் / தித்திருக்கும் அமுது கண்டேன், செயல் மாண்டு அடங்கப் புத்திகமலத்துருகிப் பெருகிப் புவனம் எற்றித் / தத்திக் கரை புரளும் பரம ஆனந்த சாகரத்தே.”
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை :- பாம்பு என்ற சொல் பாப்பு என மருவிற்று. தாருக வனத்து இருடிகள், வேதமே முதலும், பொருளும் என செறுக்குற்று அபிசார வேள்வி செய்து சிவபெருமனைக் கொல்வதற்கு கொடிய நச்சுப் பாம்புகளை ஏவினார்கள். அவைகளை அரனார் ஆபரணமாக அணிந்து கொண்டருளினார். கொல்லவந்த பாம்புக்கும் அருள்புரிந்த எம்பிரான் தொழுது வழி பட்டவர்க்கு எத்துணை அருள் புரிவார். இத்தகு கருணைக்கடலாகிய சிவபெருமான் அருளும், முத்திப் பேற்றை, மனமே நீ விரும்பவில்லையே!
நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை :- நாவின் பெருமை சொல்லவும் அரிதே. மெய், வாய், விழி, நாசி, செவி - இவை ஐந்தும் அறிகருவிகள், ஞானேந்திரியங்கள்; கருவாய், எருவாய், கைகள், கால்கள், வாய் இவை ஐந்தும் செயற்கருவிகள், கர்மேந்திரியங்கள். இந்த இரண்டு வகை இந்திரியங்களுக்கும் பொதுவாய் இருப்பது வாய். வாய்க்குள் நாக்கு, பற்கள், கன்னக் கதுப்புகள், உமிழ் நீர் ஆகியவை அடங்கும். வாய்க்கு உற்ற துணை நாக்கு. உடலுறுப்பிலுள்ள மற்றெல்லாத் தசைகளை விட, நாக்கின் தசைத் தொகுதியை மட்டுமே நமதிச்சைப்படி, அதிக உடல் முயற்சி இன்றி செயற்படுத்தவும், ஆட்டுவிக்கவும் முடியும். மருத்துவர்கள் நாவை Skeletal muscle என்பார்கள். இதற்கான விளக்கத்தை Dr.PKB அவர்களிடம் பின்னர் கேட்டுப் பெறலாம். நமதிச்சைப்படி செயல்படக்கூடிய நாவால் இறைவனின் கருணயை, மாட்சிமையை பாடிப் பரவ வேண்டாமா?
வேறொரு விளக்கமும் உண்டு : நாவை இழுத்து, மேலாக வளைத்து, அண்ணத்தைத் தடவி, உள்நாக்கோடு சேர்ப்பது ஒரு வகை யோக நெறி. பயிற்சி முதிர்ந்தால் அமிர்தம் பருகலாம்.
நல்வழி போகமாட்டமெனுகிறை :- நீர் பள்ளத்தை நாடிச் செல்வது போல் மனம் ஈனச்செயல்களையும் பாவச் செயல்களையும் நாடுகின்றது. நல்ல வழியிலே நடக்க நாட்டமில்லை.
கூட்டை விடுகிலை :- கூடு, இந்த உடம்புதான். “தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி, இரு / காலால் எழுப்பி, வளை முதுகோட்டிக் கைந்நாற்றி நரம் / பாலார்க்கையிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் / வேலால் கிரி தொளைத்தோன் இருதாளன்றி வேறில்லையே.” இந்த கூடாகிய உடம்பு ஒரு சிறைச்சாலை. சிறைக்கதவு தங்கமாயிருந்தாலும், வெள்ளியாயிருந்தாலும், இரும்பாயிருந்தாலும் சிறை, சிறை தான். சிறைக்குள் அடைக்கப்பட்டதோடு அல்லாமல் அறம், பாவம் என்னும் இரு தளைகள். ஆனால் விடுதலை பெறுவதற்கான மனமுமில்லை, செயலுமில்லை. உயிர் உள்ள பொழுது உடலை விடுவது எப்படி? அருணகிரியார் அதைச் சொல்ல வரவில்லை. “இந்த உடல்தான் நான்” என்ற தவறான உணர்வை, நம்பிக்கையை, அடையாளம் கண்டு கொள்வதை, அறியாமையை விடச்சொல்கிறார். “சிறைச் சாலையே நான்” என்ற மயக்கத்தை விடச்சொல்கிறார்.
ஏட்டின் விதிவழி ஓட்டமறிகிலை :- பிரம்மா மண்டை ஓடாகிய ஏட்டில் எழுதி வைத்த விதிப்படிதான் வாழ்க்கையின் ஓட்டம் நடைபெறும். அதை எண்ணியாயினும் பற்றறுத்தான் பற்றினைப் பற்றமாட்டேன் என்கிறோம்.
பார்த்துமினியொரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் :- மனமே! நீ படும் பாட்டை, இந்த அவலத்தைக் கண்டு சும்மா இருப்பது நன்றன்று என்பதால் இப்பொழுது நான் சொல்வதைக் கேட்பாயாக.
வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் :-‘புகழ் ஏத்த, வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்’ என்று மாற்றிப் பொருள் கொள்வோம். எப்படி என்றால், கந்தவேளின் புகழை ஏற்றிப் போற்றும் இனிய நல்வாக்கு சித்தியை அருளுவான். உள்ளத்தை நோக்கும் சித்தி, அதாவது தியானமும், நிட்டையும் கைகூடும். அன்பில் தோய்ந்த பக்தி செய்யும் அடியார்களின் இருவினைத் தளைகளும் தகர்த்தெரியப்படும்.
இந்தத் திருப்புகழ் பாடலின் ஒரு சிறப்பு சிந்தித்து மகிழ்தற்குரியது. பாடலின் மூன்றாவது பத்தியில் பஞ்சாக்கர(திருவைந்தெழுத்து) மூர்த்தியின், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஐந்தை அருணகிரியார் குறிப்பிட்டிருக்கிறார். திருவிளையாடல் ஒவ்வொன்றும் ஒரு சில வார்த்தைகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆட்டி (1) வடவரை வாட்டி அரவொடு / பூட்டி திரிபுரம் மூட்டி (2)மறலியின் / நாட்ட அற சரண் நீட்டி (3)மதனுடல் திருநீறாய் / ஆக்கி (4)மகம் அதை வீட்டி ஒருவனை / ஆட்டின் முகம் அதை நாட்டி (5)மறைமகளார்க்கும் / வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா - இமைய மலையை வாட்டி வில்லாக வளைத்து, வாசுகி என்ற நாகங்களுக்கு அரசனை நாணாகப் பூட்டி, நாமளித்த வில்லும், அம்பும், தேரும், குதிரைகளும் திரிபுர அரக்கர்களை வதம் செய்ய சிவனார்க்கு உதவப் போகின்றன என்று இறுமாந்த தேவர்களின் எண்ணத்தை உணர்ந்த அரனார் திருவுளம் பற்றிச் சிறு புன்முறுவல் பூத்தது. திரிபுராதிகள் பொசுங்கி மாய்ந்தது; மார்க்கண்டேயரின் வாழ்நாள் முடிவுற்றது. உயிரைப் பற்ற வந்த இயமனை இடப்பாத மலரால் உதைத்து அடியவரைக் காத்தது; மன்மதனைப் பார்த்து எரித்தது (திரிபுராதிகளை சிரித்து எரித்தார், மதனைப் பார்த்து எரித்தார்). சங்கரனாரை ஒதுக்கி “சிவனா, அவன் கடவுளா?” என அவமதித்துத் தலையாட்டிய தக்கனுக்கு, ஆட்டின் தலையை நாட்டி யாகத்தை அழித்தது; கதைகள் உங்களுக்குத் தெரிந்தவைதான். விளக்கம் தேவையில்லை.
சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற ஒட்டி, அழல் பசை காட்டி :- ஆளுடையப்பிள்ளை சம்பந்தப் பெருமான் மதுரையில் சமணர்களுடன் புனல் வாதஞ் செய்தபோது, “வாழ்க அந்தணர்...” என்ற திருப்பாசுரம் எழுதிய ஏட்டை வையாற்றில் விட்டருளினார். அவர் விடுத்த ஏடு நீரில் எதிர் ஏறிச்சென்றது. சமணர்கள் ஏடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
அனல் வாதஞ் செய்த போது, “போகமார்த்த...” என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிக ஏட்டை நெருப்பில் இட்டபோது, அந்த ஏடு கருகாமல், பச்சென்று பசுமையாயிருந்தது.
குருநாதா :- சமணர்களோடு வாதிட வேண்டிய கட்டாயத்திற்கு சம்பந்தர் ஆளானார். வாதிடுவதற்காக அவர் மதுரை செல்லவில்லை. மங்கையற்கரசியின் அழைப்பை ஏற்று பாண்டிய மன்னனின் உடல் நோவை திருநீற்றுப் பதிகம் பாடி குணமாக்கினார். தடுத்தாட்கொண்டார். தடுத்தாட்கொள்வது இறைவனின் அருட்செயல். சம்பந்தரை சிவஞான உபதேசிகனான முருகனாகவே ஏற்று “குருநாதா” என்று அழைக்கிறார்
தீர்த்த :- பரிசுத்தமானவரே- “ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்பார் மணிவாசகர்.
எனதகம் ஏட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி :- அகம்-உள்ளம், ஏட்டை- விருப்பம். உள்ளத்தில் விருப்பமுடன் இறைவனுடைய அரும்பெருஞ்சோதியை, தனிப் பெருங் கருணையை ஏத்த வேண்டும். சசி தேவியின் மகள் தேவசேனைக்கு உகந்த பெருமாளும் அருள் பாலிப்பார்.
அருணகிரியின் அறிவுறை: பாடி உருகுங்கள், கேட்டு உருகுங்கள், பார்த்து உருகுங்கள்.
உருகும் அன்பர்களுக்கிடையே உருகுவதைப் பற்றிப் பேச நான் யார்? என்னையே உருக்கிக் கொள்ளத்தான்.
No comments:
Post a Comment